Friday, March 2, 2012

சிதம்பரம் சகோதரருக்கு 3.25 இலட்சம் இழப்பீட்டு தொகை பெற்றுக் கொடுத்த ஜித்தாஹ் TNTJ!




ஜித்தாஹ்: கடந்த 06.06.2011 அன்று ஜித்தா ப்ரைமான் பகுதியில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுக்கா பள்ளிப்படையை (வண்டிகேட் அருகில்) சேர்ந்த சகோ.மூஸா அப்துல்லா முஹம்மது அவர்கள் சாலையை கடக்கும்போது நாசர் என்ற எகிப்து நாட்டைச்சேர்ந்த சகோதரர் ஓட்டி வந்த காரில் மோதி கோமா நிலையில் ஜித்தாவிலுள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த செய்தியினை மாநில தலைமையிலிருந்து ஜித்தா மண்டல நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அவருக்கு தக்க உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள். உடன் விரைந்த ஜித்தா நிர்வாகி அப்துல் காதர் மருத்துவமனையில் அவரை பார்த்து விட்டு மருத்துவர்களிடம் இவர் சம்பந்தமாக ஏதும் தேவைப்பட்டால் தங்களை தொடர்பு கொள்ளுமாறு கூறி தொடர்பு எண்களை கொடுத்து வந்தனர்.

இதனிடையில் ரியாதிலிருந்து சகோ. மூஸா அவர்களின் மகன் சகோ. முஹம்மது அனஸ் அவர்களும் வந்திருந்தார், அவரையும் சந்தித்து ஆறுதல் கூறி உதவிகளுக்கு தொடர்பு கொள்ளுமாறு கூறி வந்ததுடன், அவ்வப்பொழுது அவரை சென்று பார்த்தும் ஆறுதல் கூறியும் வந்தனர். இந்த விபத்துக்கிற்க்கு காரணமாகிய எகிப்து ஓட்டுனரை காவல் துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து இருந்தனர்.
இதன்பின் கடந்த 04.07.2011 அன்று சகோ. மூஸா கோமா நிலையிலிருந்து மீளாமலே வஃபாத்தாகி விட்டார்கள். உடன் ஜித்தா மண்டல நிர்வாகிகள், சகோ. முனாபும், சலாவுதீனும், சகோ. அனஸிற்க்கு ஆறுதல் கூறி, இங்கு அடக்கம் செய்வதற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, நமது ஜமாத் சகோதரர்களுடன் சென்று நல்லடக்கம் செய்தனர்.
இதன்பின் காவல் துறையை தொடர்பு கொண்டு இவருக்கான இழப்பீட்டு தொகையினை பெறும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். காவல்துறை குறிப்பில் நடந்த விபத்திற்க்கு எகிப்து சகோ. நாசர் பக்கம் 25% தவறும் சகோ.மூஸா பக்கம் 75% தவறும் இருப்பதாக தீர்ப்பளித்து இருந்தனர், சௌதியில் விபத்தில் இறக்கும் வெளி நாட்டவர்களுக்கு முஸ்லீமாக இருந்தால் 1,25000 ரியாலும் முஸ்லீம் அல்லாதவருக்கு 75000 ரியாலும் இழப்பீட்டாக கொடுக்க வேண்டும் என்பது சட்டம், இதன் அடிப்படையில் சகோ. மூஸா குடும்பத்தினருக்கு 31250 ரியால் எகிப்து ஓட்டுனர் கொடுக்கவேண்டி இருக்கும்.
 உடன் அவரை நமது நிர்வாகிகள் தொடர்பு கொண்ட பொழுது தன்னை சிறையிலிருந்து விடுவிப்பதாக சகோ. அனஸை சொல்ல சொல்லுங்கள், நான் வெளியில் வந்து இன்ஷூரன்ஸ் கம்பெனியை தொடர்பு கொண்டு அந்த தொகையின வாங்கி தந்துவிடுகின்றேன் என்று சொன்னார். அதனால் அவர் வெளிவர அனஸ் சம்மதித்துவிட்டார். வெளிவந்தவுடன் நாசர் தான் மூஸா மருத்துவ செலவிற்க்கு 24000 ரியால் கொடுத்துவிட்டதாகவும், இப்பொழுது 15000 ரியால்தான் தரமுடியும் என்று சொன்னார். இதில் உடன்பாடில்லை என்றாலும் அனஸும், நமது நிர்வாகிகளும் ஒப்புக்கொண்டனர். ஆனால் அதன் பின் நாசர் 10000 ரியால், 7000 ரியால் என தொடர்ந்து குறைத்து தருவதாக பேச தொடங்கிவிட்டார்.
மேலும் உங்களால் முடிந்தால் இதனை பெற்றுக்கொள்ளுங்கள் இல்லையென்றால் கோர்டில் சென்று வழக்கு கொடுங்கள் என்று அலட்சியமாக பேச தொடங்கிவிட்டார். பொதுவாக இந்தியர்கள் மொழி பிரச்சனையினாலும், வேலை நேரத்தில் விடுமுறை எடுத்து அலைய வேண்டி வரும் என்று தனது சொந்த விஷயத்திற்கே கோர்டிற்க்கு போக விரும்புவதில்லை, ஆனால் நமது நிர்வாகிகள் இவர்களுக்கு நியாயமான தொகை கிடைக்கவேண்டும் என்றும், அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை மட்டுமே நாடி சிரமத்திற்க்கு அஞ்சாமல் கோர்டில் பார்த்துக்கொள்வோம் என்று கூறி வழக்கை 21-08-2011 அன்று கோர்டிற்க்கு எடுத்து சென்றனர்.
பல விசாரணைகளுக்குப்பின் 04-10-2011 அன்று சகோ.மூஸா குடும்பத்திற்க்கு மருத்துவத்திற்க்காக கொடுத்த 24000 ரியால் அல்லாமல் மேலும் 25000 ரியால் வழங்கவேண்டும் என்று எகிப்து ஓட்டுனர் நாசருக்கு கட்டளையிட்டு தீர்ப்பு வழங்கியது. அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.
தீர்ப்பின் நகல்:
அதன் பின் அந்த தீர்ப்பை காவல் துறைக்கு கொண்டு சென்று உறுதிப்படுத்தி, இன்ஷுரன்ஸ் கம்பெனிக்கு கொண்டு சென்று அந்த தொகையினை பெற கடும் முயற்ச்சி எடுத்து 28-02-2012 அன்று 25000 ரியாலுக்கான (இந்திய ரூபாய் சுமார் 3.25 லட்சம்) செக்கினை பெற்று மறைந்த மூஸாவின் மகன் அனஸிடம் மண்டல நிர்வாகிகள் சகோ.முனாப் மற்றும் சலாவுதீன் இருவரும் வழங்கினார்கள். மிகுந்த மகிழ்ச்சியுடன் ஜித்தா மண்டல நிர்வாகிகளுக்கு தன் நன்றியை தெரிவித்தார். அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.
இழப்பீடு தொகையை பெற்று கொடுத்த TNTJ ஜித்தாஹ் மண்டலத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். ஜஸாக்கல்லாஹ் கைரா...
source;tntjpno.com

No comments:

Post a Comment