Sunday, December 16, 2012

நீருக்குள் பிரசவம்


பிரசவ வலி அவரை பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. ‘நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா’ என்று அவர் கூறினார். ‘கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
(அல்குர்ஆன் 19: 23,24)
பிரசவ வேதனை என்பதுஒருபெண்ணை மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்லும். அந்த நேரத்தில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு வேதனையை அந்த பெண் உணர்வாள். 
மனித உடலின் வலியை அளக்கும் அலகு டெல் ஆகும். மனித உடல் தாங்கக்கூடிய அதிகூடிய வலியின் அளவு 45 டெல் (del). ஆனால், பிரசவத்தின் போது ஒரு பெண்ணுக்கு 57 டெல் வரை வலி அதிகமாகும். இவ் வலி 20 இடங்களில் என்பு முறிந்தால் ஏற்படும் வலிக்கு சமனாகும். ஒரு மனிதனால் தாங்கக்கூடிய அதிகூடிய வலியின் அளவை விட அதிக வலியை ஒரு பெண் தன் பிரசவ வேதனையில் உணர்கிறாள்.
மேலுள்ள அல்குர்ஆன் வசனம் பிரசவ வேதனையை குறைக்கக்கூடிய ஒரு வழிமுறையை கற்றுத் தருகின்றது.
மர்யம் (அலை) பிரசவ வேதனையால் ‘நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா’ என்று கூறிய சமயத்தில் ‘கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். இதிலிருந்து அவரது வேதனையைக் குறைப்பதற்கே ஊற்று ஏற்படுத்தப்பட்டது எனத் தெளிவாகின்றது. நீருக்கு பிரசவ வேதனையை குறைக்கும் தன்மை உள்ளது என்பது இதிலிருந்து புலனாகின்றது.
நீருக்குள் பிரசவம்
நீருக்குள் பிரசவம் என்பது வெதுவெதுப்பான நீர் தொட்டிக்குள் குழந்தையை பிரசவிக்கும் முறையாகும். இதன் கோட்பாடு குழந்தை தாயின் கருவறையில் அம்னியன் திரவப் பையில்(amniotic fluid sac) இருந்து தனக்கு ஒத்த சூழலான தண்ணீருக்குள் பிரசவிக்கும் போது குழந்தை இலகுவான முறையில் பிரசவிக்கப்படும். தாய்க்கும் மன அழுத்தம் குறைவாக இருக்கும். நீருக்குள் பிரசவிப்பதன் மூலம் தாயின் மன அழுத்தமும், பிரசவ வேதனையும் குறைகின்றன என் அறியப்பட்டுள்ளது.

நீருக்குள் பிரசவிப்பதன் மூலம் தாய்க்கு ஏற்படும் நன்மைகள் 
•    இளம் சூடான நீர் வலியைக் குறைக்கக்கூடியதாகவும், இதமானதாகவும் இருக்கும்.
•    பிரசவத்தின் இறுதிக் கட்டத்தில் நீரானது அத்தாய்க்கு ஒரு ஆற்றலைக் கொடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
•    இந்த மிதப்பின் விளைவானது தாயின் அங்க அசைவுகளுக்கு இலகுவாகவும், தாயின் உடல் எடையைக் குறைக்கக்கூடியதாகவும் இருக்கும்.
•    நீரில் மிதக்கும் தன்மை கருப்பை தசைகளின் சுருக்கத்திற்கும், ஒக்ஸிஜனைக் கொண்ட இரத்த ஓட்டத்தையும் ஊக்குவிக்கின்றது. இதனால் தாய்க்கு வலி குறைகின்றது. குழந்தைக்கும் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படுகின்றது.
•    நீரில் அமிழ்ந்திருப்பதால் பதட்டம் காரணமாக ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் குறைகின்றது.
•    நீரானது மன அழுத்தம் தொடர்பான ஹோர்மோன்கள்(hormones) உருவாகுவதைக் குறைத்து எண்டோர்பின் (endorphins) எனும் வலி தடுப்பான்கள் உருவாக இடமளிக்கும்.
•    நீரானது குழந்தை வெளியேறும் அப்பகுதிக்கு மீள் தன்மையையும், இலகுவையும் கொடுத்து தையல் தேவையை குறைக்கின்றது.
•    உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் நீரானது தாய்க்கு மன அமைதியைக் கொடுக்கும்.
•    இம் முறை மூலம்; பதட்டம், அச்சம் குறைவடைகின்றது.
நீருக்குள் பிரசவிப்பதன் மூலம் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்
•    கருப்பையிலுள்ள அம்னியன் பைக்கு ஒத்த சூழலை நீர் வழங்குகின்றது.
•    நீரானது குழந்தை பிரசவிக்கும்; போது பிரசவத்தை எளிதாக்கி குழந்தையின் மன அழுத்தத்தைக் குறைத்து பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது.
மேலுள்ள அத்தனை தகவல்களும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டவை. 1970 இல் ரஷ்யா மற்றும் பிரான்சில் சில தாதிகளும், மருத்துவர்களும் குழந்தை கருப்பையிலிருந்து சுமுகமான முறையில் வெளி உலகுக்கு வருவதற்கு நீருக்குள் பிரசவ முறைக்கு ஆர்வம் காட்டினர். அவர்கள் பெண்கள் பிரசவ வேதனையால் துடிப்பது குறித்து கவலையடைந்தனர். இன்று ஐக்கிய இராட்சியம் உட்பட அநேக ஐரோப்பிய நாடுகளில் இந்த நீர் தொட்டியில் பிரசவ முறை கையாளப்படுகின்றது.
அல்குர்ஆனே நீருக்குள் பிரசவ முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது
விஞ்ஞான தகவல்களின் மூலம் முதன்முதலில் நீருக்குள் பிரசவ முறை 1970 களிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், 1400 வருடங்களுக்கு முன்பு முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்குர்ஆனில் நீருக்குள் பிரசவ முறை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எழுத்தறிவே இல்லாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நபியவர்கள் வாழ்ந்த காலத்தில் விஞ்ஞான அறிவு என்பது பூச்சியமே. எனவே, அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை அல்லாமல் வேறில்லை என்பது அல்குர்ஆனை படிக்கும் எந்த ஒரு சாதாரண மனிதனுக்கும் புரியாமல் போகாது.

No comments:

Post a Comment