Friday, August 9, 2013

நபி வழியில் பெருநாள் தொழுகை -சிதம்பரம் கிளை




சிதம்பரம்; இன்று காலை 8.00 மணிக்கு(மழையின் காரணமாக) நமது மர்கஸில் நபி வழியில் பெருநாள் தொழுகை நடை பெற்றது.

நமது பள்ளி இமாம் செங்கம் ஷாகித் அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார்கள்.இதில் அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா 2013 --சிதம்பரம் கிளை




ஏக இறைவனின் திருப்பெயரால் அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ ] 

சிதம்பரம்; தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சிதம்பரம் கிளையின் சார்பாக அல்லாஹ்வின் அருளால் கடந்த 10 வருடங்களாக ஃபித்ரா வசூல் செய்து ஏழை எழிய குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது
[ தனித்தவனின் மாபெரும் கிருபையால் ]இந்த வருடம் 400 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, August 4, 2013

பீ.ஜேயின் சொத்து விபரம் வெளிவந்தது..! பலருக்கு ஏமாற்றம்..!

“மூஃமின்களே (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாலங்கள் இருக்கும் (பிறர் குறைகளை) நீங்கள் துருவி, துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். மேலும் உங்களில் சிலர் சிலரை பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தை புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன். மிக்க கிருபை செய்பவன்”. Al - Quran (49:12)

ஜனனமும் கல்வியும்:


பீர் முஹம்மது, மர்யம் பீவி தம்பதிகளுக்கு மகனாக 1953ம் ஆண்டு, பெப்ரவரி மாதம், பத்தாம் தேதி இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில், எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர், காலம் சென்ற தனது மூத்த சகோதர் பீ.எஸ்.அலாவுதீன் (மன்பஈ) போன்று, மார்க்கக் கல்வியையே தேர்ந்தெடுத்துக் கற்று, பட்டம் பெற்றார்.




இஸ்மாயீல் ஸலபிக்கு மறுப்பு எழுதும் போது, தனது கல்வி பற்றி பீஜே குறிப்பிட்ட சில விடயங்களை இங்கு தருகின்றேன்.

என்னைப் பற்றியும் என் சகோதரர் பற்றியும் சில விஷயங்களை நான் குறிப்பிட வேண்டும்.

நானும் என் சகோதரர் பீ ஷைக் அலாவுதீன் என்ற பி.எஸ்.அலாவுதீனும் மதீனாவில் படிக்கவில்லை. உம்ராபாத்திலும் படிக்கவில்லை. மத்ஹப், ஷிர்க், தரீக்கா மற்றும் எல்லா பித்அத்களையும் ஆதரிக்கும் கல்விக் கூடங்களில் தான் பயின்றோம். அது தான் மார்க்கம் என்று போதிக்கப்பட்டோம். படித்து முடித்து வெளி வந்தவுடன் நாங்கள் நண்பர்களாக விவாதித்துக் கொண்டே இருப்போம். அப்போது தான் தர்கா வழிபாடு தவறு என்று எங்களுக்குத் தோன்றியது. இது குறித்து நாங்களே ஆய்வு செய்து, ஆதாரங்களைத் திரட்டி, ஷிர்க்கை மட்டும் எதிர்த்தோம். மத்ஹப், தரீக்கா இன்ன பிற பித்அத்களை அந்தக் கால காட்டத்தில் நாங்கள் எதிர்க்கவில்லை.

அவற்றைத் தவறு என்று கூட அறியவில்லை.தர்காவை எதிர்க்கின்ற அனைவரும் தவ்ஹீத் வாதிகள் என்று கருதியதால் அது போன்ற எல்லா இயக்கங்களிலும் தொடர்பு வைத்தோம். இதனால் தான் 280 நாட்கள் நான் தப்லீக் ஜமாஅத்தில் இந்தியா முழுதும் சென்றேன். அதுபோல், என் சகோதரர் ஜமாஅதே இஸ்லாமி, சிம் போன்ற இயக்கங்களில் ஈடுபாடு காட்டினார். அந்தக் கால கட்டத்தில் நாங்கள் தப்லீகையும் விரும்பினோம். ஜமாஅதே இஸ்லாமியையும் விரும்பினோம்.

தர்கா வழிபாட்டை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்தால்.இந்தக் கால கட்டத்தில் தான் ஃபீ ழிலாலில் குர்ஆன் என்ற சையித் குதுப் எழுதிய நூலை ஒரு நிறுவனத்துக்காக என் சகோதரர் மொழி பெயர்த்துக் கொடுத்தார்கள். தர்கா வழிபாட்டை சையித் குதுபும் எதிர்த்ததால், அந்த நூலிலும் தர்கா வழிபாட்டுக்கு ஆதரவான கருத்து இல்லாததால் நாங்கள் சரி என்று நம்பிய போது, அது மொழி பெயர்க்கப்பட்டது.

குர்ஆன் ஹதீஸில் உள்ள பல விஷயங்களை தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமீ ஆகியவை நிராகரிப்பதையும் மத்ஹபுக்கு வக்காலத்து வாங்கியதையும் படிப்படியாக கண்டு, வெறுத்து ஒதுங்கிய சில மாதங்களில் என் சகோதரர் இளம் வயதில் மரணித்த்து விட்டார். இதன் பின் என் சகோதரர் மொழி பெயர்த்த அந்த நூலை சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற்று பாக்கர் வெளியிட்டார்.

அது எனக்குத் தெரிய வந்த போது, அது குறித்த விளம்பரத்தை உணர்விலும் வெளியிட மறுத்தேன். அவர் நடத்திய தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் அந்த விளம்பரத்தைப் போடக் கூடாது என்றேன். எனது மூன் பப்ளிகேஷனில் மட்டுமன்றி, அவரது மீடியா வேல்டிலும் விற்கக் கூடாது என்று கண்டிப்புடன் தடுத்து விட்டேன். தவறான கருத்து அதில் இருக்கும் போது, அதை விற்பது எப்படி ஹலாலாகும் என்பதே இதன் காரணம். ஆயிரக்கணக்கில் அந்த புத்தகம் பாகரிடம் தேங்கி இருந்தது.) சமூகத்தில் பெரும் மாற்றங்களை நிகழ்திக் காட்டிய பெரிய அறிஞர்களின் வரலாற்றை ஆய்வு செய்யும் போது, ஓர் உண்மையையை நான் உணர்ந்து கொண்டேன்.

அவர்கள் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டததைக் கற்று பட்டம் பெறவர்களில்லை.இமாம் இப்னுத்தைமிய்யா,முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்,அல்பானி போன்ற அறிஞர்கள் குடும்ப சூலழில் கற்று தமது சுய ஆய்வு முயற்சியால் மகத்தான் பணியாற்றியவர்கள்.அந்தப் பின்னணியிலேயே பீஜேவுடைய பணியும் மதிப்பிடப்படவேண்டும்.

பல்கலைக்கழகக் கோட்பாட்டுப் பாடத்திட்டத்திற்குள் சிறைப்பட்ட பலரின் நிலையை நாம் இன்று பார்க்கின்றோம்.அவர்கள் கோட்பாட்டைவிட்டு வெளியே வரமாட்டார்கள்.சத்தியத்திற்கு மாற்றமான பாடத்திட்டத்தைப் போதிக்கின்ற ஓரு மதரசாவில் பீஜே கல்வி கற்றாலும், உண்மையை விளங்கிக் கொண்ட நாள் முதல் சந்தனக் கூடு, முரீது வியாபாரம், வரதட்சணைக் கொடுமை, தரீக்கா, ஷிர்க்-பித்அத், சமூகக் கொடுமைகள், ஆட்சியாளர்களின் அராஜகம் போன்றவைகளைக் கடுமையாக எதிர்த்து வருகின்றார். இதனால், பலமுறை கடுமையான தாக்குதலுக்கும் வெட்டுக்குத்துக்கும் உள்ளாகி, உயிர் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளார். பல முறை சிறைவாசமும் அனுபவித்துள்ளார்.

திருமணம்:

1980ஆம் ஆண்டு வரதட்சணை வாங்காமலே திருமணம் செய்தார். வரதட்சணைக் கொடுமை தாண்டவமாடும் ஒரு நாட்டில், வரதட்சணை வாங்காத இவரின் வீரமிக்க இச்செயல், அன்று வினோதமாக நோக்கப்பட்டுக் கொச்சைப்படுத்தப்பட்டது. அதை அவர் கண்டு கொள்ளவில்லை. அதன் விளைவாக இன்று பலவாயிரம் இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யத் துணிவு பெற்றுள்ளனர். அத்தோடு, வரதட்சணைக் கொடுமையை அறியாமல் அப்போது வாங்கிய தொகையை, பகிரங்கமாக திருப்பிக் கொடுக்கின்றனர்.

பீஜே அவர்களும் காலம்சென்ற அவரது அண்ணன் அறிஞர் பீ.எஸ். அலாவுத்தீன் மன்பயீ அவர்களும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ததற்கு ஒரு வாத்தியாரின் பரிதாபகரமான தற்கொலை முடிவு காரணமாக அமைந்தது. பல பெண் குழந்தைகளையுடைய அவர் தனது பெண் குமருகளை கரை சேர்க்கப் வரதட்சணைப் பணம் இல்லாததால் ஆயுள் காப்புறுதி செய்து விட்டு, லாரியில் மோதி தற்கொலை செய்து கொண்டார்.

இது தற்கொலை என்பதால் அவரது குடும்பம் குடும்பத் தலைவனையும் இழந்து காப்புறுதிப் பணமும் கிடைக்காமல் தவித்தது. வரதடசணையின் இக்கோர முகம் இவர்களது வாழ்வில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.அப்போது, ஏகத்துவக் கொள்கையில் பெரியளவு தெளிவு கிடைக்காத நேரம். இப்போதது, வரட்சணைக்கு எதிரான பிரசாரத்தை பீஜே அளவுக்கு யாரும் செய்யவில்லை. அறியாமல் வாங்கிய வரத்சணையை திரும்பக் கொடுக்கும் அளவு பெரும் தாக்கத்தை அவரது பிரசாரம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார நிலை :

மார்க்கப் பிரசாரப் பணியில் ஈடுபடுகின்றவர்களின் பொருளாதாரம் சரியானதாக இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.அதனால்,பீஜேவுடைய பொருளாதார நிலை பற்றி முதலில் இங்கு குறிப்பிடுகின்றோம். இன்று மார்க்கப் பிரசாரத்திற்காக பலர் அறபு நாடுகளில் சம்பளம் பெற்று,தமது வாழ்வை வளப்படுத்திக் கொள்கின்றனர். இன்றைய உலமாக்களில் பலர் மார்க்கப் பிரசாரம் செய்கிறோம் என்ற பெயரில் வெளிநாடுகளில் ரியால்,தீனார்,திர்ஹம் எப்பவற்றிற்காக தஞ்சமடைந்தவர்களாகவே உள்ளனர். அல்லது வெளிநாட்டுக் காசை நம்பி உள்நாட்டில் மார்க்க வியாபாரம் செய்பவர்கள். சொகுசாக இருந்து கொண்டு,ஒன்றிரண்டு பயான்கள் செய்து,உப்புச் சப்பில்லாத கட்டுரை எழுதிக் கொண்டு,பீஜேவுடைய பயானைக் கேட்டு கட்டுரைகளைக் காப்பி  பண்ணிவிட்டு பிரசாரம் செய்வதாக சொல்லிக் கொள்பவர்கள்.


இத்தகையவர்களில் ஒருவராக இருந்துகொண்டு, அற்ப நலன்களுக்காக ஜால்ராப் போடும் சிலர் பீஜே பொருளாதாரம் பற்றி அண்மையில் கேள்வி எழுப்பினர் அவதுாறு பரப்பினர். அதற்குப் பீஜே அளித்த பதிலை இங்கு தருகின்றோம். 

எனது சொத்து, எனது பொருளாதார நிலை குறித்து பொதுவாக நான் அதிகம் பேசுவதில்லை.இது போல் சீண்டும் போது மட்டுமே நான் பேசி இருக்கிறேன். இது குறித்துப் பேசும் போது நான் எதையோ எதிர்பார்ப்பதாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்து, பேசுவோர் பேசிக் கொள்ளட்டும் என்று இருந்து வருகின்றேன். இப்போது நாம் யுத்த களத்தில் நிற்கும் போது நீங்கள் கேட்பதால் நான் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.முதல் எனது சொத்து விபரத்தைத் தந்து விடுகிறேன்.

நான் 25 ஆண்டுகளில் சம்பாதித்த எனது மொத்த சொத்தின் மதிப்பு, ஒரு சிலர் பள்ளிவாசல் கட்டுவதற்குக் கமிஷன் அடிக்கிறீர்களே அதை விடக் குறைவு தான். மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நிஜமாகத் தான் சொல்கிறேன். உள்ளது. இரண்டு கிரவுன்ட் அளவு.
நான் தற்போது சென்னையில் சிறிய வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊரில் எனது தந்தையிடமிருந்து வாரிசாகக் கிடைத்த ஒரு வீட்டு மனை உள்ளது. இரண்டு செண்டுக்கும் குறைவான சுமார் 800 சதுர அடி அளவுடையது. இது எனது சம்பாத்தியம் அல்ல.எனது குடும்ப நகைகளை விற்று மதுரையில் நான் ஒர் அச்சகம் நடத்தினேன். மிஷினை நானே இயக்குவேன்!பைண்டிங் செய்வேன்!இன்னும் அச்சு சம்மந்தமான அனைத்து வேலைகளையும் நானே செய்து வந்தேன். இதனிடையே தான் தாஃவா பணியையும் செய்து வந்தேன்.

தமுமுக ஆரம்பித்த பின் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு நான் சென்னையில் இருக்க வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதால் நான் சென்னைக்கு வருவதற்காக அச்சகத்தை விற்றேன். எனது ஊரைச் சேர்ந்த தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தம்முடைய ஒரு வீட்டை விற்க இருப்பது தெரிந்ததால் அச்சகத்தை விற்ற பணத்தில் அந்த வீட்டை வாங்கினேன்.எனது பூர்வீக இடத்தில் சொந்த வீடு ஒன்று கட்டினால் நல்லது என்று நான் நினைத்த போதுஇ அதற்கான நிதி என்னிடம் இல்லை. அப்போது நான் வாங்கிய வீடு நல்ல விலைக்குப் போகிறது என்பது தெரிந்ததால் அதை விற்று விட்டு உங்கள் பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமே என்று ஹைதர் அலி ஆலோசனை கூறினார். அதை விற்று (அப்போது ஐந்து இலட்சம் என்று நினைவு) அதில் தான் எனது பூர்வீக இடத்தில் நான்கு லட்சம் ரூபாயில் ஒரு பெட்ரூம் உள்ள சிறு வீடு கட்டினேன். 

அந்த வெள்ளை மாளிகையைப் பற்றி இலங்கையைச் சேர்ந்த ரஸ்மி (முஜீப் விவாதத்துக்காக தொண்டி வந்திருந்தார்.) அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.(இவரும் இவரது நண்பர்கள் சிலரும் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டாலும், எனது பொருளாதார நிலையை அறிந்து கொள்வதற்காக இரகசிய வருகை தந்தனர். இஸ்மாயீல் ஸலபி வகையறாக்கள் பணம் பண்ணுவதற்காக தவ்ஹீத் பேசுவது போல் பீஜேயும் பேசுகிறாரா என்று ஆராய்வதற்காகவே ஒரு குழுவாக வந்தார்கள். எனக்குத் தெரியாமல் நான் வாடகைக்குக் குடியிருக்கும் சிறிய வீட்டையும் எனக்கு என்று சொந்தமாக எந்தச் சொத்தும் இல்லை என்பதையும் விசாரித்து அதன் பிறகு தான் தவ்ஹீத் ஜமாஅத்தில் தீவிர ஈடுபாட்டுடன் உள்ளனர். பிற்காலத்தில் இதை என்னிடம் அவர்களே சொல்லிக் காட்டினர்.)

வீடு கட்டுவதற்குப் போக மீதமுள்ள தொகை ஒர் இலட்சத்துடன் முப்பதாயிரம் சேர்த்து ஒர் இலட்சத்தி முப்பதாயிரம் ரூபாய்க்கு ஹைதர் அலி ஆலோசனையின் பேரில் எனது ஊருக்கு அருகில் ஒரு வயல் வாங்கினேன்.எனது பூர்வீக வீடும் அந்த வயலும் தான் என்னிடம் உள்ள அசையாச் சொத்துக்கள்.மதுரையில் இருந்த போது, நல்லூர் என்ற கிராமத்தின் அருகில் மிகக் குறைந்த விலைக்கு மணை கிடைக்கிறது என்று சிலர் கூறியதை நம்பி (1990 இருக்கும் என்று நினைக்கிறேன்.) 3000 ரூபாய்க்கு ஒரு மனை வாங்கினேன். மக்கள் குடியேறாத பகுதியில் உள்ள அந்த இடம் இருக்கிறதா? யாரும் ஆக்ரமித்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.
 
என் பெயரிலோ என் மனைவியின் பெயரிலோ எந்த வங்கிக் கணக்கும் இல்லை. வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளாதவன் இந்தக் காலத்தில் நானாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். எனது மூன் பப்ளிகேஷன் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது. அதில் புத்தகங்கள் விற்பது தொடர்பான வரவு செலவு தவிர வேறு எந்த வரவு செலவும் இல்லை. அதை நான் இயக்குகிறேன்.என் மகன் பத்துக்கு பத்து அளவில் சிறிய கடை வைத்துள்ளார். இரண்டாம் மகன் இந்து சகோதரருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.
 
நாங்கள் மூவரும் உழைத்துத் தான் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம். நாங்கள் மூவரும் உழைப்பது சொத்துக்கள் வாங்குவதற்குப் போதுமானது அல்ல.

இதைத் தவிர வேறு ஏதாவது சொத்துக்கள் என் பெயரிலோ என் மனைவி பெயரிலோ என் பிள்ளைகள் பெயரிலோ இருந்தால் இஸ்மாயீல் சலபிக்கு நான் இலவசமாக அளிக்கத் தயாராக இருக்கிறேன். அல்லது யாரெல்லாம் இது பற்றி பேசித் திரிகிறாரோ அவர்கள் அனைவருக்குமே இதைக் கூறிக் கொள்கிறேன். அவர்கள் இது தவிர என் பெயரிலோ என் மனைவி மக்கள் பெயரிலோ சொத்துக்கள் இருந்தால் இலவசமாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.  

எனக்கு இருக்கும்(?) சொகுசு பங்களாக்கள், கார்கள், பண்ணை வீடுகள் அனைத்தையும் இஸ்மாயீல் ஸலபிக்குத் தந்து விடுகிறேன்.அல்லது யாரெல்லாம் இது பற்றி பேசித் திரிகிறாரோ அவர்கள் அனைவருக்குமே இதைக் கூறிக் கொள்கிறேன்.இது போன்ற கிறுக்குத் தனங்களுக்கு ஒரு மனிதன் பதில் சொல்லாமல் இருந்தால் எதை வேண்டுமானாலும் சொல்வீர்களா?

நான் மதுரையில் அச்சகம் நடத்திக் கொண்டிருந்த போது, சில இளைஞர்கள் வந்தனர். பத்துப் பேர் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.அவர்கள் வந்த போது, கையால் இயக்கப்படும் கட்டிங் மிஷினில் நான் பேப்பர் கட்டிங் செய்து கொண்டிருந்தேன். வந்தவர்கள் என் காலையே பார்த்தார்கள். என்ன விபரம் என்று கேட்ட போது, நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் செருப்பு போட்டிருப்பதாகச் சொன்னார்கள். அதைத் தான் பார்க்க வந்தோம் என்று கூறினார்கள். நான் ஹவாய் செருப்பு அணிதிருந்ததையும் உடலுழைப்பு செய்ததையும் பார்த்து விட்டு அதன் காரணமாக தவ்ஹீதுக்கு வந்தார்கள்.இது போல் நீங்கள் அவதூறு பரப்பியதால் தால் சத்தியம் வளர்ந்து கொண்டிருக்கிறது.இப்படி எல்லாம் சிலர் நினைப்பதற்குக் காரணம் உள்ளது.

 (பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர் (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (திருக்குர்ஆன் 2:273)

மூடர்கள் பார்த்தால் செல்வந்தர்கள் என்று நினைக்கும் அளவுக்கு நபித்தோழர்கள் சுயமரியாதையுடன் நடந்ததை அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான். அதை இஸ்மாயீல் ஸலபி மூலம் அல்லாஹ் என் விஷயத்திலும் மெய்யாக்கி விட்டான். அல்ஜன்னத்தில் 2000 சம்பளம் வாங்கிக் கொண்டைருந்தவன் தானே என்று அவர் கூறுவதன் உள் நோக்கம் அனைவருக்கும் தெரிந்ததே அதாவது மார்க்கப் பணியின் மூலம் நான் பணம் திரட்டினேன் என்று சொல்லாமல் சொல்கிறாராம்.

எனவே, இது குறித்தும் நான் விரிவாகச் சொல்லும் நிலையை ஏற்படுத்தி விட்டார்.


நான் மதரஸாவில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் எனது ஆசிரியர்கள் செல்வந்தர்கள் வீடுகளுக்குச் சென்று வாசலில் காத்துக் கிடப்பதையும் செல்வந்தர்களைக் கண்டதும் எழுந்து நிற்பதையும் மலேசியா சென்று கவுரவப் பிச்சை எடுத்ததையும் கண்ட போது, நானும் சுய மரியாதை உள்ள என் சக மாணவர்களும் கூனிக் குறுகி விடுவோம். இந்தப் பணத்தாசை தானே உண்மையைச் சொல்வதை விட்டும் இவர்களைத் தடுக்கிறது என்று பேசிக் கொள்வோம். இவ்வாறு பேசிக் கொண்டவர்களில் முஹம்மது கான் பாக்கவி மட்டும் என் நினைவில் இருக்கிறார். மற்றவர்கள் நினைவில் இல்லை.

சின்ன வயசில் நான் அப்போதே சபதம் எடுத்தேன். எந்த நிலையிலும் செல்வந்தர்களிடம் போய் நிற்கக் கூடாது. கூனிக் குறுகக் கூடாது. நமக்காக் எதையும் கேட்கக் கூடாது என்றெல்லாம் தீர்மானம் செய்து கொண்டேன். அல்லாஹ்வின் அருளால் 29 ஆண்டுகள் இந்த சபதத்தில் உறுதியாக இருந்து வருகிறேன்.
மிக மிக நெருக்கமான சில நண்பர்களிடம் கடன் வாங்கியதுண்டு. அல்லாஹ்வின் அருளால் இன்று என் உறவினர் தவிர வேறு எவருக்கும் நான் பத்துப் பைஸா கூட கடனாளி இல்லை.
எத்தனையோ தடவை வெளி நாடுகளுக்கு நான் பிரச்சாரத்துக்குச் சென்றுள்ளேன். எனக்கு எந்த அன்பளிப்பும் தரக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் சென்று வந்தேன். சில பொருட்களை நான் வாங்கி வந்தேன் என்றால் எனது சொந்தப் பணத்தில் வாங்கியது தான்.
அதனால், பணத்துக்காக சத்தியத்தை மறைக்கும் இஸ்மாயீல் ஸலபீ போன்றவர்களின் செயல் எனக்கு வெறுப்பாகத் தெரிகிறது.அதனால் தான் நீங்கள் கற்பனை செய்வது போல் நான் சொத்து சேர்க்கவில்லை.அனைத்துச் செல்வத்தையும் விட தன்மானத்தையே நான் பெரிய செல்வமாகக் கருதுகிறேன்.நான் செய்யும் மார்க்கப் பணிக்காகவோ, சமுதாயப் பணிக்காகவோ எந்த ஊதியமோ வேறு ஆதாயமோ அடையக் கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருக்கின்றேன். 

மார்க்கத்துக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பொருளாதாரத்தை வழங்கலாம் என்பதில் எனக்கு மறுப்பு இல்லை. மேற்கண்ட வசனத்திலேயே அதற்கு அனுமதி உள்ளது. இல்லாவிட்டால் தாவா ப்ஃணிகள் அறவே நடைபெறாத நிலை ஏற்படும் என்பதையும் நான் அறிவேன். ஆனாலும் நான் அந்த நிலையை என் விஷயத்தில் தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
ஆனாலும் இதுவக்காலத்தில் எனக்கு வேறு வழி தெரியாத நிலையில் நஜாத் பத்திரிகையில் ஐஏசி அமைப்பின் மூலம் மாத ஊதியம் (சுமார் ஒருவருடம் இருக்கலாம்) வாங்கினேன். அப்போது கூட அந்த ஊதியம் எனது மார்க்கப் பணிக்காக இருக்கக் கூடாது என்பதற்காகப் பத்திரிகைகளை சந்தாதாரர்களுக்கு அனுப்புதல், ஸ்டாம்ப் ஒட்டுதல், பார்சல் கட்டுதல் ப்ரூஃப் திருத்துதல் உள்ளிட்ட பணிகளையும் செய்து வாங்கிய ஊதியத்துக்காக உடல் உழைப்பு செய்தேன்.

அடுத்து, அல்ஜன்னத் பத்திரிகையை நான் தான் நடத்தினேன். அதில் நட்டம் ஏற்பட்டதால் நடத்த முடியவில்லை. எனது அச்சகத்தின் வருமானத்தையும் அது சாப்பிடக் கூடிய நிலை ஏற்பட்ட போது, மக்களிடம் நன்கொடை கேட்டால் தருவார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள்.ஒரு இயக்கம் நன்கொடை கேட்கலாம். தனி நபர் நன்கொடை கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, ஜாக் இயக்கமே எடுத்துக் கொண்டு மக்களிடம் நன்கொடை பெற்று நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறி ஒப்படைத்து விட்டேன்.

அது வரை எனது அல்ஜன்னத் அச்சகத்தில் அச்சிட்டு நான் தான் நடத்தி வந்தேன்.இதன் பிறகு தான் அல்ஜன்னத் பத்திரிகை சென்னைக்கு மாறியது. அப்போது தான் 2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன். அதைத் தான் ஸலபி குறிப்பிடுகிறார்.அந்த உறுத்தலைத் தவிர்பபதற்காக எழுத்துப் பணி அல்லாத வேறு பணிகளையும் நான் செய்தேன். (அது ஒரு தனிக் கதை) சில காலம் (எவ்வளவு காலம் என்பது நினைவில் இல்லை.) இந்த ஊதியத்தைப் பெற்றாலும் சமுதாயப் பணிகள் செய்ய ஜாக் இயக்கம் முட்டுக்கட்டை போட்டதாலும் ஆசிரியரான எனது எழுத்துச் சுதந்திரத்தைப் பறித்ததாலும் நான் விலகிக் கொண்டேன்.

சென்னையில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த எனக்கு அந்தச் சம்பளம் வாடகைக்குக் கூட போதுமானதாக இல்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.சென்னை வந்ததும் நூல்கள் எழுதி, தனியார் புத்தக வெளியீட்டாளர்களிடம் கொடுத்து, வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் இலாபம் தான் எனது வருமானமாக இருந்தது. அதன் பின் நானே புத்தகம் வெளியிடலானேன்.
எனக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டு சீரியஸான நிலையில் தமுமுக நிர்வாகிகள் என்னை தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அப்போது, அதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவானது. அதை உணர்வு இதழில் இருந்து செலுத்தினார்கள். நான் எவ்வளவோ மறுத்தும் கடனாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியும் அவர்கள் மறுத்து விட்டனர். இவ்வளவு காலம் உணர்வு பணியைச் சம்பளம் இல்லாமல் செய்தீர்கள். அதற்கான ஊதியமாக இருக்கட்டும் என்று கூறியதை அப்போது நான் ஏற்றுக் கொண்டேன். தர்மமாக வாங்காமல் உழைப்புக்காக வாங்கினோம் என்ற மனத் திருப்தி ஏற்பட்டது.

ஆனால், நூல்கள் வெளியிட ஆரம்பித்த பின் கிட்டத் தட்ட பத்து ஆண்டுகளாக நான் எந்தப் பணிக்கும் எந்த ஊதியத்தையும் பெற்றதில்லை. உணர்வில் கட்டுரை எழுதுதல், கேள்வி - பதில் எழுதுதல், பிழை திருத்தல் மற்றவர்களின் கட்டுரைகளைத் தணிக்கை செய்தல் ஆகிய அனைத்து வேலைகளையும் நான் செய்து வந்த போதும் இந்தப் பத்து ஆண்டுகளில் எந்த ஊதியமும் பெற்ற்தில்லை.

தஃவா சென்டரில் பாடம் நடத்திய போதும் அதற்காக நான் எந்த ஊதியமும் பெற்றதில்லை.தவ்ஹீத் ஜமாஅத் தலைமைப் பொறுப்பில் எனது முழு நேரத்தையும் செலவிட்ட போதும் அதற்காக ஊதியமோ ஊக்கத் தொகையோ நான் பெற்றதில்லை.நான் பொறுப்பு வகித்த எந்த இயக்கத்திலும் பண வரவு - செலவை நான் கையாள்வதில்லை. சில நெருக்கடியான் நேரத்தில் கையாள வேண்டிய நிலை ஏற்பட்டால் இன்னொரு நிர்வாகி, அல்லது சில நிர்வாகிகள் துணயுடன் தான் கையாண்டிருக்கிறேன். எந்தக் கடனும் ஜமாஅத்தில் பெற்றதில்லை.தலைமைப் பொறுப்பின் மூலம் நான் ஆதாயம் அடைந்தவனாக இருந்தால் நான் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகாமல் தொடர முடியும்.

நான் பொறுப்பில் தொடர்வதைத்தான் மக்களும் விரும்பினார்கள். ஆதாயத்துக்காக பொறுப்பில் உள்ளவன் என்றால் இதை விட்டு விலகிக் கொள்ள மாட்டார்.ஜாக் தலைமைப் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.தமுமுக பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகியதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் எனது தேவைகளுக்கு ஏற்ப சம்பாதிக்க இந்தப் பொறுப்புக்கள் தடையாக இருப்பதும் முக்கிய காரணமாகும்.

தேர்தல் திருவிழாக்கள் வரும் போது, இயக்கத் தலைவர்களுக்கு நல்ல அறுவடை கிடைக்கும்.ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் தனியாக எந்த அரசியல் தலைவரையும் சந்தித்தது இல்லை. பல நிர்வாகிகள் அல்லது பல இயக்கத்தினருடன் தான் சந்தித்துள்ளேன். கடந்த தேர்தல் திமுகவை ஆதரித்தோம் இட ஒதுக்கீட்டுக்காக தேர்தல் முடிந்த சில மாதங்களில் முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டம் அறிவிக்க முடிந்ததற்குக் காரணம் எனக்கோ நான் சார்ந்துள்ள இயக்கத்துக்கோ எந்த ஆதாய எதிர்பார்ப்பும் இல்லாததே காரணம்.

ரமலான் மாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விளம்பரம் மூலம் நடத்தப்பட்ட போது, பல இலட்சங்கள் லாபம் கிடைத்தது. உங்கள் உரை தானே ஒளிபரப்பாகிறது. இதை நீங்களே விளம்பரம் பிடித்து நடத்தலாமே என்று பல நண்பர்கள் என் நிலைமை அறிந்து என்னிடம் கூறினார்கள். நான் மறுத்து விட்டேன். அந்த வருவாய் அப்போது தமுமுகவுக்கு பயன்பட்டது. இப்பொது தவ்ஹீத் பணிக்குப் பயன்படுகிறது. இதை நான் நடத்தினால் யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது. ஆனால், இவன் ஆதாயத்துக்குத் தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்று ஒருவன் நினைத்து சத்தியத்தை மறுத்து விடக் கூடாது என்பதற்காக இந்த நிலைப்பாட்டை எடுத்தேன்.

மீடியா வேல்டு மூலமும் தொலைக்காட்சி மூலமும் குறுந்தகடுகள் விற்பனை மூலமும் தனி நபர் சம்பாதிக்கிறார். நீங்களே நடத்தலாமே என்று கூறிய போது அதையும் நான் மறுத்து விட்டேன்.என்னால் ஜமாஅத் ஆதாயம் அடையும் வகையில் தான் அன்றும் இன்றும் நடந்து வருகிறேன். இனியும் நடக்க துஆ செய்யுங்கள்.

ரமலானுக்கு முன் ஒரு சிறு கடையை வாடகைகுப் பேசி வைத்திருந்தேன். எனக்கு என்று தெரிந்தவுடன் தர மறுத்து விட்டனர். வாடகைக்கு வீடு பேசிவிட்டு வந்தால் மறு நாள் இல்லை என்று கூறி விடுவார்கள். இதற்கெல்லாம் கூட இடையூறு செய்பவர்கள் உள்ளனர். இப்படி பல விதமான இழப்புகள் தான் எனக்குக் கிடைத்துள்ளது.




மார்க்கத்தை தொடர்புபடுத்தி நான் சம்பாதிப்பதாக யாரேனும் கூறுவதாக இருந்தால் நான் புத்தகம் எழுதி விற்பனை செய்வதைத் தான் கூற முடியும். புத்தகத்தின் எழுத்துக்காக நான் எந்த விலையும் வைப்பதில்லை. பிரபலமான எழுத்தாளர்கள் எழுதும் 40 பக்க புத்தகம் 100 ரூபாய் விலை போடப்படும். அப்படி எல்லாம் நான் போடவில்லை.புத்தகம் தயாரிக்கும் செலவு, அதை விற்பனை செய்யும் இடத்துக்கான வாடகை, அட்வான்ஸ், மின் கட்டணம், ஊழியர் சம்பளம் ஆகிவற்றுக்கு நான் முதலீடு செய்த அடிப்படையில் தான் அதில் லாபம் கிடைக்கிறது.

மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு அதில் எனக்கு வருமானம் வருகிறது. அதில் உள்ள முதலீட்டை எடுத்து வேறு ஏதாவது வழியில் பயன்படுத்தினால் எனக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும். அது பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.என்னுடைய நூல்கள் பலவற்றை சவூதியிலுள்ள ஜாலியாத்கள் இலவசமாக வெளியிட்டுள்ளன. அதனால், எனக்குப் பாதிப்பு என்று நான் சிந்திக்காமல் அனுமதித்தேன். பீஜே நூல்களுக்கு சவூதியில் தடையா என்ற கட்டுரையில் இதை விளக்கியுள்ளேன்.


பீஜே நூல்களுக்கு சவூதியில் தடையா என்ற கட்டுரையை காண Kindly Visit the below Link : 



ஏசுபவர்கள் ஏசட்டும்! அவதூறு கூறுபவர்கள் அவதூறு கூறட்டும்!சகோதரர் பீஜே அவர்களின் பணி தொடர வல்ல ரஹ்மானிடம் துவா செய்வோம்...


பீஜேயின் சொத்து விபரம் வெளிவந்தது!..பலருக்கு ஏமாற்றம்..! வரலாறு இன்னும் வளரும் இன்ஷா அல்லாஹ்...


குறிப்பு : பீஜேயின் சொத்து குறித்து பலர் பித்னா செய்கின்ற காரணத்தால் இதை இங்கு விலகி கூற வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளோம்.

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். Al - Quran (49:6)


பதிந்தவர் சகோதரர் காரைக்கால் அன்சாரி அவர்கள் - நன்றி